வியாழன், 7 ஆகஸ்ட், 2014

இம்மானுவேல்

 இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று முன்னுரைத்திருக்க 

அவருக்கு இயேசு என்று பேரிட்டார்களே…!–

ஏசாயா 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
மேலே நாம் காணும் இந்த வசனம் மிகவும் பிரசித்தி பெற்ற வசனமாகும், கிறிஸ்துவின் பிறப்பை திட்டமாய் முன்னறிவித்த இந்த வசனமானது அதே அளவிற்கு விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது,
அதற்கான முதல் காரணம்,
ஏசாயா கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே அறிவித்த இந்த தீர்க்கதரிசனம் கிறிஸ்து பிறப்பில் நிறைவேறியது என்பது அனைத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, ஆனால் சில கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள், பிறக்கப்போகும் மேசியாவிற்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று முன்னுரைத்திருக்க, அவருக்கோ இயேசு என்றல்லவா பேரிட்டார்கள், அப்படியானால், இந்த தீர்க்கதரிசனம் இயேசுவை குறிக்கும் தீர்க்கதரிசனம் இல்லை என்று வாதிடுகின்றனர்.குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள் இந்த வசனத்தை வைத்து குறை கூறி வருகின்றனர், அவர்களுக்கு விடையளிக்கும் விதமாகவும் கிறிஸ்தவர்கள் தெரிந்துகொள்ளவும் இதை எழுத தேவ ஆவியானவர் நடத்தினார்,
ஏசாயா தீர்க்கர்,மேசியாவிற்கு இம்மானுவேல் என்ற நாமத்தை  மாத்திரமல்ல,ஏசாயா 9:6ல் நீங்கள் பார்த்தீர்களானால், அவருடைய நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும், என்று குறிப்பிடுகிறார், அப்படியானால் அவருக்கு இந்த பெயர்களெல்லாம் இடப்படவில்லையே என்று சொல்வார்களானால், அது அவர்களுடைய அறியாமை என்றுதான் சொல்லவேண்டும், ஏனென்றால், தீர்க்கர் மேசியாவின் அடையாள பெயர்களாகவும் , காரணப்பெயர்களையுமே குறிப்பிட்டு முன்னுரைத்துள்ளார்,
அந்த வகையில் இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம் கொள்ளும் ஒரு அடையாள அல்லது காரணப்பெயர்தான் என்பதை அறிந்துகொள்ள இயலாமல் பைபிளை குறை கூறி வருகின்றனர்,
இம்மானுவேல் என்ற அடையாள பெயருக்கு இயேசு கிறிஸ்து எவ்விதத்தில் பொருத்தமானவர் என்று ஒரு வேளை நீங்கள் கேட்கலாம், இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பின்பு தம்முடைய சீஷர்களை பார்த்து சொன்னார் “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்”(மத் 28:20)
உலகில் பிறந்த எந்த மனுஷனோ அல்லது எந்த மனுஷியோ அல்லது எப்பேற்பட்ட வல்லமையுடைய தீர்க்கதரிசியானாலும் ஞானிகளானாலும், அரசர்களானாலும் முற்றும் துறந்த முனிவர்களானாலும் சரி தன் சீடர்களை பார்த்து அல்லது தன் அபிமானிகளை பார்த்து, அன்பின் மிகுதியினால் நான் உங்களுடனேயே இருக்க விரும்புகிறேன் என்று உறுதி இல்லாமல் ஆசையை மாத்திரமே கூற இயலும், ஒருவேளை சிலருக்கு தன் காலத்தில் வாழ்கிற தன் சீடர்கள், தன் அபிமானிகளோடு கடைசி வரை வாழும் வாய்ப்பும் கிடைத்திருக்கலாம், ஆனால் உலகில் பிறந்த எந்த மனுஷனும் உலகத்தின் முடிவுவரை நான் உங்களை விட்டு விலகாமல் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று சொல்ல இயலுமா என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்,
அதை சொல்ல அதிகாரமும் வல்லமையுமுடையவர் ஒருவர் மாத்திரமே அவர்தான் இயேசு கிறிஸ்து, உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று உலகில் தோன்றிய வேறு எவரும் சொன்னதில்லை சொல்லப்போவதுமில்லை, அப்படியானால் இவர் தீர்க்கதரிசிகளுக்கும் மேலானவர், முனிவர்களுக்கும் மேலானவர், ஞானிகளுக்கும் மேலானவர், ராஜாக்களுக்கும் மேலானவர், அப்படியானால் இவர் யார்?, இப்போது நீங்கள் இம்மானுவேல் என்ற காரணப்பெயரின் அர்த்தத்தை பார்த்தால் அதில் “தேவன் நம்மோடிருக்கிறார்”, உலகின் முடிவுவரை நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று சொன்ன இயேசுவை தவிர இந்த பெயர் வேறு யாருக்கு பொருத்தமாக இருக்கக்கூடும் என்று நீங்களே நிதானித்து அறிந்துக்கொள்ளுங்கள், இன்றைக்கும் அவருடைய சீஷர்கள் “எங்கள் ஆண்டவரே இம்மானுவேலே” என்று இம்மானுவேல் என்ற நாமத்திலே அவரை புகழ்ந்து போற்றுகிறோமே, ஆம்! ஆண்டவரும் நம் தேவனுமாகிய நம் கர்த்தர் நம்மோடிருக்கிறார்,
இரண்டாவதாக அவர்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால், ஏசாயா 7:14 ல் மூல வேதாமாகிய எபிரேயத்தில் “கன்னி” என்று குறிப்பிடாமல் “இளம் பெண்” என்றே குறிப்பிடுகிறது, ஆகவே இது கிறிஸ்துவுக்கு பொருந்தாது என்பது அவர்களின் வாதமாகும்,
மூல வேதமாகிய எபிரேய வேதத்தில் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு இளம்பெண் என்று அர்த்தம் கொள்ளும் “அல்மா”(ALMAH) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, கன்னி என்பதற்கு “பெத்துல்லா”(bethulah)என்ற பதமே பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்றே குற்றம் சாட்டி வருகின்றனர்,
அதைக்குறித்து சற்று விலாவாரியாக காணலாம், அல்மா(ALMAH) என்ற வார்த்தை ஏசாயா 7 : 14 தவிர  வேதாகமத்தில் மற்ற சில இடங்களிலும் குறிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எந்த இடத்திலும் அது திருமணமான பெண்ணை குறிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும், இதோ அந்த ஆதாரங்களை உங்கள் முன் வைக்கிறேன்,
1. ஆதி 24 : 43 ல்  ரெபேக்காளை பெண் பார்க்க சென்ற ஆபிரகாமின் ஊழியக்காரன் அவளைக் குறித்து குறிப்பிடுவதாக காணப்படுகிறது, இந்த இடத்தில் ரெபேக்காளை குறிக்க “அல்மா” என்றே எபிரேய வார்த்தைதான் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதை தமிழ் மற்றும் KJV ஆங்கில மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் நீங்கள் காணும்போது “கன்னி” என்ற வார்த்தையே குறிப்பிடப்பட்டுள்ளது, கன்னித்தன்மை இல்லாத பெண்ணை ஈசாக்கிற்கு பார்க்கவில்லை என்பதற்கு ஆதாரமாக இதற்கு முந்தின வசனமான ஆதி 24 :16 ல் நீங்கள் பார்ப்பீர்களானால் அங்கே பருஷனை அறியாத கன்னி என்று ரெபேக்காளை குறிப்பிடுகிறது,
2.  யாத் 2 : 8 ல் நீங்கள் கண்டீர்கள் என்றால், தன் தாயினால் வளர்க்க கூடாமல் நாணற்பெட்டியில் வைத்து நைல் நதியில் விடப்பட்டபின் அந்த பெட்டி பத்திரமாக இருக்கிறதா என்று கண்டறியும்படி பிள்ளையின் தாய் அதன் அக்காவை அனுப்பி வைக்கிறாள் , அந்த பிள்ளை மோசேயை பார்வோனின் குமாரத்தி கண்டு வளர்க்க ஆசைப்படுகிறாள், அந்த பிள்ளை பால் மறக்கும் மட்டும் தனக்காக பிள்ளைக்கு பால் கொடுக்கும் பெண்ணை கூட்டிவரும்படி பிள்ளையின் அக்காவிடமே பார்வோன் குமாரத்தி சொல்கிறாள், இப்படியாக மோசேயின் அக்காவை இந்த இடத்தில் குறிக்கப்பயன்பட்ட எபிரேய வார்த்தை “அல்மா”, என்பதையும் கவனியுங்கள், அவள் திருமணமான பெண்ணாக வேதம் இங்கு குறிக்கவில்லை, திருமணமான பெண் தன் தாய் வீட்டு காரியங்களை இன்னும் கவனித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
3. உன்னதப்பாட்டு 6:8 ல் நீங்கள் பார்ப்பீர்களென்றால், அங்கே சாலமோன் அரசனுடைய அரண்மனையில் இருந்த பெண்களைக் குறித்து குறிப்பிடப்படுகிறது, அதிலே, அவருக்கு 60 ராஜ ஸ்திரிகளும், எண்பது மறுமனையாட்டிகளுமுண்டு, கன்னியருக்கு தொகையில்லை, எனக் குறிப்பிடப்படுகிறது, இந்த வசனத்தில் கன்னி என்று குறிக்க பயன்பட்ட எபிரேய வார்த்தை என்ன தெரியுமா? “அல்மா” என்ற வார்த்தைதான், ஒருவேளை அவர்கள் கன்னிகளாக இராமல் இருந்திருப்பார்களென்றால் அவர்களும் மறுமனையாட்டிகள்(CONCUBINES) கணக்கில்தான் சேர்ந்திருப்பார்கள் என்பதை புத்தியுடையவர்கள் சிந்தித்துக்கொள்வார்கள்
இதே போல வேதாகமத்தில் மற்ற வேறு சில இடங்களிலும் இந்த “அல்மா” என்ற வார்த்தை கன்னிப்பெண்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது அந்த வசன குறிப்புகளை உங்கள் முன் வைக்கிறேன், சங்கீதம் 68:25, உன்னதப்பாட்டு 1:3, நீதி 30:19, போன்ற இடங்களிலும் கன்னிப்பெண்களை குறிக்க “அல்மா” என்ற எபிரேய வார்த்தையும் அதன் பன்மை வார்த்தையான “அலமோத்” என்ற வார்த்தையுமே பயன்படுத்தப்பட்டுள்ளது,
பரிசுத்த வேதாகமம் ஒரே காலக்கட்டத்தில் எழுதப்பட்டதல்ல, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆவியானவர் தூண்டுதலோடு எழுதப்பட்டது என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் அறிவர், இது தேவ ஆவியானவரின் உதவியோடு புரிந்துகொள்ளுதலின் அடிப்படையிலான வார்த்தைகள், இவ்வுலக ஞானத்தினால் வேதத்தை பார்க்கிறவர்களுக்கு கிறிஸ்தவர்களின் செயல்களை பார்க்கிறவர்களுக்கும் பைத்தியம் போல தோன்றலாம், சத்தியமே ஜெயிக்கும், சத்தியபரராகிய இயேசுவே ஜெயிப்பார், நம்பிக்கை இல்லாதவர்களின் கூட்டத்தில் நீங்கள் யாரும் பங்கடையாதபடி இப்படிப்பட்ட வஞசகர்களின் கூட்டத்திற்கு விலகியிருங்கள், உங்களுக்கு வேதம் சரியாக தெரியவில்லை என்றால் இப்படிப்பட்ட வஞ்சகர்களின் பேச்சை கேட்க இடம்கொடாமல் யோசேப்பைப் போல அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள், அவர்கள் தங்களுக்கு தாங்களே ஞானிகளாக நினைப்பவர்கள், நீங்கள் ஆக்கினைக்குள்ளாகாதபடி அப்படிப்பட்டவர்களை விட்டு விலகுங்கள், இதோ நம்முடைய கர்த்தர் வருகை சமீபம், சத்தியத்தின் ஆழங்களை அறிந்துகொள்ள பிரயத்தனப்படுங்கள், தேவ ஆவியில் நாளுக்கு நாள் பலப்படுங்க்ள், ஆமென்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக