இயேசு பரமேரிய பின்பு அந்திரேயா, கப்பதோக்கியா, பித்தினியா, கலாத்தியா, பைசாந்தியம் (தற்போதய இஸ்தான்புள்) இடங்களில் நற்செய்தி அறிவித்து சபைகளை நிறுவினார். பின்னர் கருங்கடலின் வடபகுதியில் அமைந்துள்ள சித்தியா என்ற பகுதியில் அந்திரேயா நற்செய்தி அறிவித்தார் என தொடக்க கால வரலாற்று ஆசிரியர் எசபியஸ் (Eusebius) எழுதியுள்ள Ecclesiastical History 3.1.1 புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் சித்தியர்கள் (Schythians) காட்டுமிராண்டிகளாகவும் நாகரீகம் அறியதவர்களாகவும், முரடர்களாகவும் இருந்தனர். இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் அந்திரேயா நற்செய்தியை அறிவித்ததாக ஆதிகால திருச்சபை வரலாறு கூறுகிறது.
இதன்பின்னர் அந்திரேயா கிரீஸ் நாட்டில் திரேஸ், மாசிடோனியாப் பகுதிகளில் ஊழியஞ் செய்து இறுதியாக அகாய் மாநிலத்தின் பாட்ராசு (PATRAS) என்ற பட்டணத்திற்கு வந்து அங்கேயும் ஊழியம் செய்தார். அகாய் மாநிலத்தின் ஆளுநர் ஏகீசு என்பரின் மனைவி மரணத்தை நெருக்கும் நிலையில் இருந்தாள். அந்திரேயா கிறிஸ்துவின் நாமத்தினால் அவளை சுகப்படுத்த அவள் இயேசுவை சொந்த இரட்சகராக எற்றுகொண்டாள். இது ஆளுநர் ஏகீசுக்கு பிடிக்கவில்லை. ஏகீசுவுக்கு ஸ்ட்ராட்டோகிள்சு என்ற தம்பி இருந்தார். இவருக்கு அருமையான வேலைக்காரன் “ஆல்க்மேன்” மரண வியாதிப்பட்டிருந்தான். அந்திரேயா கிறிஸ்துவின் நாமத்தினால் அவரையும் சுகப்படுத்த ஏகீசுவின் தம்பியும் இயேசுவை ஏற்றுக்கொண்டார். இதை அறிந்த ஏகீசு, அந்திரேயாவை சிறையில் அடைத்து சிலுவையில் அறைய உத்தரவிட்டான். அந்திரேயா அதிக வேதனை அடையவேண்டுமென சொல்லி, சிலுவையில் ஆணிகள் அடிக்காமல், கயிறுகளால் சேர்த்து கட்டச் செய்தான். பசியினாலும் தாகத்தினாலும் வருந்தி சாவதைப் பலர் காணவேண்டுமென்று அப்படி செய்தான். ஏழு ரோம சேவகர்கள் அந்திரேயாவைச் சாட்டையால் அடித்து துன்புறுத்தினர். அந்திரேயா, “என் ஆண்டவர் மரித்த சிலுவை வடிவில் நான் மரிக்க தகுயற்றவன். என்னை பெருக்கல் (X) வடிவ சிலுவையில் அறைய வேண்டும்” என்றார். அந்தபடியே 'X' வடிவ சிலுவையில் கயிறுகளால் இறுக்கி கட்டினார்கள். அவர் சிலுவையைக் கண்டதும், "மேன்மையான சிலுவையே, உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்று ஜெபித்தார். இரண்டு நாட்கள் வேதனை மத்தியிலும், சிலுவையை சுற்றி நின்றவர்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து இரத்த சாட்சியாக கிரீசு நாட்டின் பாட்ராசு நகரில் மரித்தார்.
அந்திரேயா மரித்த பின்னர் நடந்து ஸ்காட்லாந்து தேசத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பாரம்பரிய செய்தி கூறுகிறது. ஸ்காட்லாந்து நாட்டின் பிகட்சின் என்ற பகுதியின் அரசன் அங்கஸ், இங்கிலாந்து அரசனான அதெல்ஸ்டான் (Athelstan) உடன் போர்க்களத்தில் இருந்தான். போரின் முந்தின நாள் இரவில் பிகட்சு அரசன் அங்கசின் கனவில் அந்திரேயா தோன்றி, ‘இயேசு போரில் துணை செய்து வெற்றியளிக்க போவதாக” கூறியுள்ளார். அடுத்த நாள் போர்க்களத்தில் பிகட்சு படையின் நீளத்தில், வானத்தில் மிகவும் ஒளியுள்ள ஒரு சிலுவை காணப்பட்டது. இந்த சிலுவை பிகட்சு அரசன் அங்கஸ் வெற்றிபெறும் வரையில் மறையவில்லை. அன்று முதல் நீள நிற பின்னணியில், வெள்ளை நிற சிலுவை ஸ்காட்லாந்து தேசத்தின் தேசிய கோடியாக உள்ளது.
அந்திரேயா ஒரு பெரிய பிரசங்கியாக இருக்கவில்லையென்று சுவிசேஷங்களிலிருந்து தெரிகின்றது. ஆனால், அநேகரை தனிப்பட்டவிதத்தில் கிறிஸ்துவண்டையில் வழிநடத்தினான். சிலுவையில் தொங்கும் வேளையிலும் ஆத்தும பாரமுள்ளவனாய் சாட்சி பகிர்ந்தான். நாமோ நம்மிலுள்ள குறைகளைத்தான் பெரிதாக எண்ணுவோம். பிரசங்கம் செய்யத் தெரியாது, ஜெபிக்கத் தெரியாது, வேதம் படித்துக்கொடுக்கத் தெரியாது என்று எத்தனை சாக்குபோக்குகள். இதனை வாசிக்கும் நீங்கள் ஒரு நல்ல பிரசங்கியாக இல்லாதிருக்கலாம். ஆனால், தனிப்பட்டவிதத்திலே சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு எந்தத் திறமையும் தேவையில்லை. தேவஅன்பு இருந்தால் போதும். அதனை எல்லோரும் செய்யலாம். அந்திரேயாவைப்போல வீட்டாரைக்குறித்தும், உங்கள் சொந்த நாட்டாரைக் குறித்தும் ஆத்தும பாரமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக